நண்பர்களே ....!
பத்தி எழுத்து மகா பேஷனாகியிருக்கும் ஒரு தருணத்தில் எனக்கும் என் அனுபவத்தில் எழுதுவதுக்கு
கொஞ்சமே நிறைய இருக்கு. 15 ஆண்டுகளுக்கு முன்பே " பழைய அந்த நாட்கள் .." என்ற தலைப்பில் ஏதேதோ
எழுதி வைத்திருந்தேன்.( சுஜாதா பாதிப்பு) எனவே என் நினைவுகளை பின்னும் ,முன்னுமாக ( முன்னும் ,பின்னுமாக அல்ல)
எழுதிப்பார்க்க ஆசை . நமக்கே நமக்கான பக்கம்தான் இங்கே மிகத் திறந்து கிடக்கிறதே....எதையும் எழுத.
ரெடி .....ஜூட் !......
எடுறா பேனாவ......ஆமா இங்க பேனா எதுக்கு.....? டைப்ப தட்டுறா ......ஒ.கே...... சார்ட் மியூசிக் .......
ம்ம்ம் ........ எங்கேயிருந்து தொடங்குவது ..... .....மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜெக்ட்ரான நம்ம குருநாதர் சுஜாதவிலிருந்தே
ஆரம்பிப்போம். சுஜாதாவை நம்பினோர் கைவிடப்படார் .......அப்பல்லம் தமிழில் வரும் அனைத்து வார இதழ்களிலும்
தொடர் எழுதிய ஒரே எழுத்தாளர் சுஜாதா மட்டுமே. அவரைப்படிக்க எல்லா வார இதழ்களையும் வாங்குவேன். அப்ப
ஆரம்பிச்சது இந்த புத்தகங்கள் வாங்கும் பழக்கம். இப்பவும் வாங்கி அடுக்கிக்கிட்டே இருக்கேன்.படிக்கத்தான் நேரம் இல்லை.
(இப்படியே சொல்லி ஓட்டுறா காலத்த..) எழுத மட்டும் நேரம் இருக்குதா என்ன ...? எங்கயாச்சும் "இந்த நேரம்." கடனா கிடைக்குங்களா....?
"அந்த காலத்துலயிருந்து இதையே சொல்லிட்டே இருக்கியேடா ..ச்சே ! வெட்கமாயில்ல உனக்கு ...? உன்கூட எழுத ஆரம்பிச்ச ஜெயமோகன் , எஸ்.ரா
போன்றவர்கள் எல்லாம் எங்கேயோ போய்ட்டாங்க ..."
" யார்ரா அது ...?''
" உள்ளுக்குள்ளிருக்கும்..நான்டா....நீ பேசாம எழுது."
" சரிங்க பாஸ் ..."
ஆங் பாஸ்ன்னு சொன்னவுடன் நம்ம வசந்த் பய்யன் ஞாபகத்துக்கு வந்துட்டான்.
என்ன ஒரு ஜாலியான கேரக்டர் அவன். போனவாரம் கூட " கொலையுதிர் காலம் " நாவலை எடுத்து புரட்டினேன்.உற்சாகம் குறையும் போதெல்லாம்
சுஜாதவைதான் எடுத்து படிப்பேன். (இலக்கியக்கார்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து அடிக்க வந்துவிடாதீர்கள்.....) சின்னச்சின்னவரிகள் ..கிம்மிங் ..வார்த்தைகள் என்று தமிழில் புதுமை செய்த ஒரு ஒப்பற்ற எழுத்து நடை.
ஒரு பாராவில் சொல்லவேண்டியதை " அவன் படிகளில் இறங்கிய போது ஜன்னலுக்கு வெளியே வெயில் அடித்தது ..." என்று ஒரே வரியில்
நேரம் ,காலம்,சூழல் என சுருக்கமாய் எழுதியது மட்டுமல்ல , "அவன் தொலை பேசினான்.."
ப
டி
களில்
இ
ற
ங்
கி
னான்....
என்றெல்லாம் எழுதி வாசகர்களை சொக்கவைத்தவர்.
அறிவியலை எளிமையாக தமிழ் வாசகர்களுக்கு புரிய வைத்து விஞ்ஞான கதைகளையும் கட்டுரைகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்.அவர் இருக்கும் வரை கம்முனு இருந்த நம்ம ஜெ .மோ. இப்ப அவரின் அறிவியல் புனை கதைகளை சகட்டு மேனிக்கு கிண்டலடிக்கிறார்.
(தொடரும்..)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக