புதன், 25 ஏப்ரல், 2012

"கருப்பாயி என்கிற நூர்ஜஹான்" -நாவலை முன் வைத்து

15.4.2012 அன்று கோவையில் அன்வர் பாலசிங்கம்  எழுதிய " கருப்பாயி என்கிற நூர்ஜகான்" -நாவல் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.இலக்கிய விமர்சகர் பொ.வேல்சாமி ,கவிஞர் .அறிவன் , முஜிப் ரஹ்மான் மற்றும்  நானும்  நூல் விமர்சனம்  செய்தோம்.பொன். சந்திரன் (பி.யு.சி.எல் ) அவர்கள் தலைமை  வகித்தார்.முகம் பதிப்பகம் சார்பாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.  விழாவின் சில துளிகள். நான் கட்டுரை வாசிக்கும்போது குறிப்பிட்டது. இஸ்லாத்தில் சாதீயம் இல்லை . ஜெயமோகன் போன்றவர்கள் இதை இருப்பதாக கட்டமைக்கிறார்கள் .இப்போது ஜாகீர் ராஜாவும் சேர்ந்து கொண்டிருக்கிறார். ராவுத்தர் ,லெப்பை , மரக்காயர் ,பட்டாணி போன்றவைகள் உட்பிரிவுகள்.இது சாதீயத்தை குறிக்காது . யாரும் யாரிடமும் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ளலாம்.பொருளாதார ஏற்றதாழ்வுகள் எல்லா சமூகத்திலும்  உள்ளதுதான் .இதை சாதீயமாக கருதமுடியாது.இதை இஸ்லாத்தில் சாதீயமாக கீரனூர் ஜாகிர் ராஜா போன்றோர் கட்டமைக்கிறார்கள். அவருடைய  'மீன்கார தெரு" நாவலில் இதைதான் கட்டமைத்து  எழுதியுள்ளார்.   அன்வரின் இந்த நாவலின்  களம்  முப்பது  ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறி  நாட்டையே திடுக்கிட ,திரும்பிப்பார்க்க வாய்த்த நிகழ்வு அது. இப்போது  அந்த   மக்களின்  35வயதுக்கும்  மேலான முதிர் கன்னிகளின் வாழ்க்கை  சிக்கலே நாவலின் மையம்.சுற்றிலும் உள்ள முஸ்லிம்கள்  யாரும் இவர்களிடம் பெண் எடுப்பதில்லை இதைத்தான்  இந்த 90 பக்க நாவலில் உரையாடல்கள் மூலம் அன்வர்  கேள்விகளை தொடுத்துள்ளார். இஸ்லாத்தில்  தற்கொலைக்கு அனுமதி இல்லை .ஆனால் நாவலின் முடிவில்  குடும்பமே தற்கொலை செய்து கொள்கிறது.  இந்த 30 வருட  இஸ்லாமிய  வாழ்கையில்  இஸ்லாம்  இவர்களுக்கு எதையும் கற்றுக்கொடுக்கவில்லையா ....?  
             நிகழ்வின் முடிவில் கேள்வி பதில். முஸ்லிம் நண்பர் ஒருவர் அன்வர் பாலசிங்கத்திடம் கேட்டாரே பாருங்கள் ஒரு கேள்வி . "இந்த நாவலை எழுதுவதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது ? இதை நீ எப்படி எழுதலாம் ?" அவர்கள் பட்ட வேதனையை ,வலியை ,சொல்லுவதற்கு என்ன பெரிய தகுதி வேண்டும் ? உண்மையை சொன்னால் ஏன் இவர்களுக்கு வலிக்கிறது ?
கேள்வியை கேட்டு விட்டு பதிலைக்கூட தெரிந்து கொள்ளாமல் அவர் ஓடிப்போய்விட்டார் என்பதுதான் இதில் பெரிய வேடிக்கை. அப்புறம் எதற்கு இப்படி கேள்வி கேட்டு மேலும் நோகடிக்க வேண்டும் ?  

கோவை இலக்கிய சந்திப்பின் 16 வது நிகழ்வு

கோவை இலக்கிய சந்திப்பின் 16 வது நிகழ்வு 25.3.12 ஞாயிறு அன்று 4 நாவல்கள் 7 கவிதைத் தொகுப்புகள் என 11 நூல்கள் விமர்சனம் காலை முதல் மாலை வரை இனிது நடைபெற்றது.அவைநாயகன் அவர்கள் நடுவராக இருந்து நிகழ்வுகளை நடத்தினார்.சிறப்பு விருந்தினர்களாக ஞானிஅய்யா, குளச்சல் மு.யூசுப்,கனடிய ஈழ எழுத்தாளர் அகில், புது எழுத்து மனோன்மணி ஆகியோர் கலந்து கொண்டனர். குளச்சல் யூசுப் அவர்கள் மலையாளத்திலிருந்து மொழி பெயர்த்த நான்கு மிக முக்கிய நாவல்களான மீசான் கற்கள்,மக்க்ஷர்பெருவெளி , அக்னிசாட்சி ,ஒரு அமர கதை ஆகிய நாவல்கள் குறித்து திரு.யுகமாயினி சித்தன் அவர்கள் மிகச் சிறப்பாக விமர்சித்து மதிப்புரை வழங்கினார். புனத்தில் குன்சப்துல்லா வின் இரண்டு நாவல்களின் கதைகளை சொல்லி கதை நிகழ்வுகளை கண்முன்னே கொண்டுவந்தார் சித்தன். ஸ்ரீ குமார் எழுதிய "ஒரு அமர கதை" புத்தகத்தையே இன்று தான் பார்க்கும் வாய்ப்பே கிடைத்தது.தந்த்ரா யோகம் பற்றி இந்திய அளவில் எழுதப்பட்ட முதல் நாவல் இது என்பது குறிப்பிடத்தக்கது.1997 ல் மொழி பெயர்க்கப்பட்ட நாவல் இது .மறுபதிப்பு வரவேயில்லை. முதல் பதிப்பே யாருக்கும் தெரித்த நிலையில் மறுபதிப்பு எங்கே வரும் ..? இந்த நாவல் குறித்து சித்தன் அவர்களின் மதிப்புரை உன்னதமான ஆய்வுக்கட்டுரையாக இருந்தது . "ஒரு அமர கதை'' என்ற இந்த நாவலை " காதை " பதிப்பகம் வெளியிட்டுள்ளது.மறுபதிப்பு யாரவது கொண்டுவரவேண்டும்.இந்த நான்கு நாவல்களை குறித்து பேசும் போது ,மலையாளத்தில் எழுதுவது போல பாலியலை இங்கே எந்தப்படைப்பா ளியும்,இவ்வளவு வெளிப்படையாக,மூடி மறைக்காமல் துணிச்சலுடன் எழுதவில்லை - எழுதுவதில்லை என்று சித்தன் அவர்கள் குறிப்பிட, திரு.பொதியவெற்பன் அவர்கள் தி.ஜா, தஞ்சை பிரகாஷ், எம்.வி.வெங்கட்ராம் போன்றோர் எழுதியுள்ளனர் என்றார்.தஞ்சையை தவிர வேறு பகுதி படைப்பாளிகள் எழுதவில்லை என்றார் சித்தன்."பொதுவுடைமை கட்சிகளின் தாக்கம் இது.கேரளாவை போலவே ,தஞ்சையில் தான் பொதுவுடைமை கட்சி ஆரம்பிக்கப்பட்டது-வளந்தது ...." என்று விளக்கம் சொன்னார் குளச்சல் யூசுப் அவர்கள்.குளச்சல் யூசுப் அவர்கள் சிறப்பான முறையில் ஏற்புரையாக நிறைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.இந்த நாவல்களை குறித்து ஞானி அய்யாவும் பொதுவாக சில கருத்துகளை பேசினார்.
திரு.அவை நாயகன் மதிப்புரை வழங்கிய கவிதை நூல் பட்டாம் பூச்சியை மட்டுமே கதா பாத்திரமாக கொண்ட "தேவதைகளின் மூதாய்". புதிய படைப்பாளியான ரவிராஜின் முதல் கவிதை நூல் இது. குழந்தை தன்மையுடன் வண்ணத்துப்பூச்சியை சிறு வயது முதல் ரசித்து வருவதாக குறிப்பிட்டார் இவர்.சின்ன சின்ன வரிகளில் அற்புத அனுபவமான அழகிய கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. காட்டை-இயற்கையை மிக நேசிக்கும் அவை நாயகன் இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கியது மிக பொருத்தமாக இருந்தது.
புது எழுத்து - வெளியிட்ட சபரிநாதனின் "களம் காலம் ஆட்டம் " கவிதை நூலை இளங்கோ கிருஷ்ணன் மிகச்சிறப்பான முறையில் விமர்சனம் செய்தார்.இலங்கையின் உன்னத கவிஞர் றியாஸ் குரானாவின் " நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு " கவிதைத்தொகுப்பிலிருந்து சில கவிதைகளை தியாகு வாசித்தார்.

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

கவிதைகள்

எங்கள் வீடு
பக்கத்துக்கு  வீடுகளை விட  உயரமாய்
மேல் தளத்தில்  
ஆஸ்பெஸ்டாஸ்  ஓடு  வேய்ந்த கம்பீரத்துடன்
மழை காலங்களில்
பின்புறம்  சேறும் சகதியும் கொண்ட  
செந்நீர் ஓடும்  வாய்க்காலுமாய்
கரையைத் தொட்டுக்கொண்டு
வேப்பமரமும், கொடுக்காயப்புளி  
முருங்கயுமாய்
முக்கிய சாலைக்கு அருகிலேயே
முன்புறம் விசாலமான
காலியிடமும்
நாலு நண்பர்களுடன்
சாவகாசமாய்  அமர்ந்து
இலக்கியம் பேச  திண்ணையுமாய்
சௌகரியமாய்தான்  இருக்கிறது
குடித்தால் மட்டுமே வந்து
ரகளை செய்யும்
வீட்டுக்காரனின்
சொந்த வீடு.   
            **********
 2.
தினம்  தினம்
செல்ல மகனின்
ஓயாத நச்சரிப்பு
இந்த ஆண்டாவது
அதை
உபயோகப்படுத்தச் சொல்லி...
வாங்கியதிலிருந்து
சும்மாவே  கிடக்கிறது
பரண் மேல்
ட்ராலி சூட்கேஸ்
                ************

ஃபிர்தவ்ஸ்  ராஜகுமாரன்

  நான்கு கவிதைகள் :
     ***********
1.
கண்களை மூடி
தொழுகையில்
நிற்கும் போதெல்லாம்
பூதாகாரமாய்
எதிரே  நிற்கிறது
சைத்தான் !
2.
ஆறறிவுள்ள மனிதன் நான்
என்னால் எதையும்
செய்ய முடியும்
இறுமாந்திருந்த நேரத்தில்
சட்டென நதி கடந்து
மலை மீது பறக்கிறது
ஒரு வண்ணத்துப்  பூச்சி....
3.
எப்போதும்
அடைக்கப்பட்டிருக்கும்
வீடுகளுக்குள் கிடக்கிறது
குழந்தைகள் விளையாடும் தெரு
யாருடைய  சிநேகமும் இன்றி
தொலைக்காட்சி  பெட்டிகள் முன் 
குழந்தைகள் 
சிறைப்  படுதப்பட்டிருக்க
குழந்தைகள் விளையாடாத  தெருவில்
 குடியிருக்கின்றன வீடுகள் .  
4.    
 விளையாடிக் களித்து
குளித்து முடித்து
கரையேறிய  பின்பும்
மிச்சமிருக்கிறது
உடல் முழுவதும்
கடல் .

எப்போதும்
எங்கள்  முகத்தில்
காரி உமிழ்ந்து கொண்டேயிருக்கிறீர்கள்
எங்களின் கதறல்
உங்களின் காதுகளில் விழுவதேயில்லை 
நாங்கள் 
எதுவும் செய்ய இயலாமல்
வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்
மக்களை கொன்று  குவிக்கும்
அவர்கள்
அறைகூவல் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்
பயங்கரவாதத்தை ஒழித்து விடுவதாக.....
அவர்கள் முகமூடி  அணிந்திருப்பது
தெரிந்தும்  அவர்களைத்தான்
நீங்கள் இன்னமும்
நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்
உங்களின் கண்களுக்கு
அவர்களின் காலடியில் கிடக்கும்
மனித உடல்கள் மட்டும்
தெரிவதேயில்லை .....! 

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

பயான்

எங்கள் முஹலவுக்குள் புதிய பள்ளிவாசல் எழும்பிக்கொண்டிருந்தது. முஹல்லா வாசிகள் இது குறித்து ரொம்ப சந்தோசப்பட்டுக்கொண்டார்கள். ஆனாலும் கட்டுமானப்பணி செலவுக்கு ஒவ்வொரு குடும்பமும் இவ்வளவு கொடுத்தாகணும் என்று கறாராக பண வசூல் செய்த போது முணுமுணுப்பு எழுந்தது . " இருக்குற பள்ளில தொழுவுரதுக்கே ஆளக்காணோம் .இதுல இன்னொரு பள்ளியாக்கும் ...."
"
முக்கு திரும்புனா…. நம்ம பள்ளியிருக்கு . பத்தாததற்கு மெயின் ரோட்ல தவுஹீத் பள்ளியிருக்கு. அப்பறம் இன்னொரு பள்ளிக்கு அப்படியென்ன அவசியம் ...?"
"
கியாமத் நாளின் அடையாளதுல ஒண்னு நிறைய பள்ளிவாசல்கள் உருவாகும் ……..ஆனா தொழுவரதுக்கு ஆளு இருக்கமாட்டாங்க. இது நபிகள் நாயகத்தோட ஹதீசாக்கும்.....நாமலே அத நெஜமாக்கிட்டு வரோம் ."
எனக்கும் இப்படியான எண்ணமிருக்கு. இருந்தாலும் , நாம் குடியிருக்கிற பக்கமே ஒரு பள்ளியிருந்தா ஐவேளையும் நேரந் தவறாம தொழலாமே .....

பள்ளிவாசல் கட்ட மஜீத் பாய் தான் இடம் வாங்கிக்கொடுத்தார். இல்ல இல்ல இது அவரோட இடமாக்கும் என்றெல்லாம் முஹலாவுக்குள் பேச்சுருக்கு. பள்ளி கட்டவும் அவருதான் முழுக்கவும் செலவு செய்யுறார். பாத்தாகுறைக்குதான் முஹல்லா வசூல். இப்ப த்டீர்னு இந்த புதுப்பள்ளி கட்டுறதுக்கு தவ்ஹீத் பள்ளி இமாமோட எதோ கருத்து வேறுபாடுதான் காரணம்னு சொல்லிக்குறாங்க. ஆக நம்ம முஹல்லப்பள்ளியும் இன்னொரு தவ்ஹீத் பள்ளிதான் ...இப்படி பல பேசுக்கள் கிளம்பி உலாவிகிட்டு இருக்கு.

ஒரு வழியாக புதுப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டு வெள்ளிகிழமை அஷர் தொழுகை நேரத்துல பள்ளிவாசல் திறப்பு விழா செய்யப்பட்டது. பக்கத்துக்கு முஹல்லாவிலிருந்தெல்லாம் கூட்டம் திரண்டு வந்தது புதுப்பள்ளியில் அஷர் தொழுவதுக்கு. மஜீத் பாய் தலைமை உரையாற்றினார். முன்னதாக வரவேற்றுப் பேசியவர், 'நமது ஜமாஅத்தின் தலைவர் மஜீத் பாய் அவர்கள் தலைமையரையாற்றுவார்.......' என்ற போது எனக்கு குழப்பம் ஏற்பட்டது. இவர் எப்போது இந்த புது ஜமாஅத்தின் தலைவராக்கப்பட்டார் என்பதே அந்த குழப்பம். அதைவிட வரவேற்புரையாற்றியவர் புது ஜமாஅத்தின் செகரட்டரி என்றார்கள். முஹல்லவாசிகளான எங்களுக்கெல்லாம் தெரியாமல் எப்போது எப்படி புது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் ....என்று எனக்கு ஏற்பட்ட சந்தேகமும் ,குழப்பமும் மற்றவர்களுக்கும் எழ ஒருவருக்கொருவர் காதைக் கடித்துக்கொள்வதைப் பார்தேன். மஜீத் பாய் பேச எழுந்த போது , 'ஜமாஅத்தின் தலைவராகி முஹல்லாவை ஆட்டிப்படைக்கவே இந்த புதுப்பள்ளியைக் கட்டினாரோ இவர் ...என்றும் மெல்ல ஒரு பேச்சும் எழுந்து அடங்கியது. " ஜமாஅத் என்றால் ஐக்கியம்..ஐக்கியம் என்றால் ஒன்று பட்டு செயல் படுவது. ஆக அய்கியமில்லாமல் ஜமாஅத் இல்லை.ஜமாதில்லாமல் அய்கியமுமில்லை....." என்று நேர்த்தியான பேச்சாளரைப் போல தோரணையுடன் பேச்சை ஆரம்பித்த மஜீத் பாய் பின்பு மெல்ல சுருதி குறைத்து , " ஆனால், நம்முடைய இந்த ஜமாஅத் எந்த ஒரு கூட்டமைப்பிலையும் இல்லை ...." என்ற போது ,சின்ன சலசலப்பு எழுந்தது . 'என்ன சொல்கிறார் இவர்.’ எனக்குள்ளும் குழப்பம் . " அதாவது சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பிலோ ஐக்கிய ஜமாஅத்திலோ நம்ம ஜமாஅத் சேரவில்லை.இனியும் சேராது . இது தனித்தியங்கும் ஜமாஅத் ..." என்று கூறி விட்டு கூட்டத்தை சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு தொடர்ந்தார் ." இது எப்படி சாத்தியம்.....? அய்கியமில்லாமல் ஜமாஅத் இல்லைன்னு சொல்லிவிட்டு , யாருடனும் ,எந்த ஒரு ஜமாஅத்தின் கூட்டமைப்பிலும் சேராமல் ஒரு ஜமாஅத் இயங்க முடியுமா...? முடியாது . என்றாலும் நம்ம ஜமாஅத் அப்படித்தான் இயங்கப்போகிறது. இதுக்கு எந்த காரணமும் இல்லை. இந்த ஜமாஅத் அப்படியொரு முடிவை எடுத்திருக்கிறது." என்று ஆணித்தரமாக பேசி விட்டு அமர்ந்தார். எதற்காக இப்படியொரு முடிவு ..? எல்லோருக்கொள்ளும் இந்த கேள்வி எழுந்தது ..?

இவர்களாக ஒரு முடிவை எடுத்து விட்டு, இந்த ஜமாஅத் தனித்து இயங்கும்னா இதற்கு என்ன அர்த்தம். இவர்களுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது ..? எப்படி ஒரு ஜமாஅத் யாருடனும் ஒட்டாமல் தனித்து இயங்க முடியும்...? இப்படியாக ஆளாளுக்கு பேசிக்கொண்டார்களே தவிர, நிர்வாகத்தை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கவில்லை. இதைத்தானே மஜீத் பாய் எதிர் பார்த்தார். ஆக சாதித்து விட்டார் மனுஷன்! இருக்கிற குழப்பங்கள் போதாதுன்னு....இதென்ன புது குழப்பம்....! எல்லாம் பணம் செய்யும் வேலை. பணமிருக்கிறவன் எதையும் செய்யலாம். எவனும் எதிர்த்து கேள்வி கேட்கமாட்டான்.. இங்கு இது எழுதப்படாத சட்டம். ஆக மொத்தத்தில் இது குழப்பவாதிகளின் இன்னொரு கூடாரம்னு முதல் நாளிலேயே தெரிந்து போனது.

மறு நாள் சிறு வயதுக்காரர் ஒருவர் பள்ளிக்கு புது இமாமாக நியமிக்கப்பட்டார். இமாம் வந்த முதல் நாளே தொழுகைக்கு பிறகு கூட்டு 'துஆ' (பிரார்த்தனை) செய்யப்படவில்லை. அது மட்டுமல்ல தொழுகையை முடித்த கையோடு , பின் சுன்னத் தொழுகையை கூட நிறைவேற்றாமல் இமாம் உடனே எழுந்து வெளியே போய் நின்று கொண்டு செல்போனை நோண்டிக்கொண்டிருப்பார். ஆக இது எந்த ஜமாஅத் என்பது எல்லோருக்கும் புரிந்து போனது. இமாமை எதிர்த்து யார் கேள்வி கேட்பது ..? முஸ்தபா ராவுத்தர் போன்ற சில சுன்னத் ஜமாஅத் காரர்கள் புலம்பிக்கொண்டே சென்றார்கள் .

-'பயணமாக மூன்று பேர் செல்வதாக இருந்தால் கூட , அதில் ஒருவரை உங்கள் இமாமாக (தலைவர்) ஏற்றுக்கொள்ளுங்கள்....." என்று

ஒற்றுமைக்கும், ஐய்க்கியதுக்கும் மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும் - தொடர்ந்து இதை எப்போதும் வலியுறுத்திக்கொண்டே இருக்கும் மார்க்கத்தில்தான் அதை செய்யக்கூடாது ,இதை செய்யக்கூடாதுன்னு இந்த புதுப்புது இயக்கங்களால் இப்படியான குழப்பங்களும் ,அக்கப்போர்களும் நாளும் தொடர்கின்றன......இறைவனை வணங்குவதில் கூட ,அது கூடும்… ....இது கூடாது என்று ஆயிரத்தெட்டு கருத்து வேறுபாடுகள் கொண்ட கூட்டம் கடிவாளம் இல்லாத குதிரைகளாட்டம் பெருகிக்கொண்டே இருக்கு.....

மாலை வேளைகளில் அஷர் தொழுகைக்கு பிறகு குரான் கற்றுக்கொடுக்க மதரசா வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இருந்தும் ,ஒரு பிடிப்பும் ஒட்டுதலும் இல்லாமல்தான் மொகல்லா வாசிகள் புது ஜமாத்துடன் அன்னியப்பட்டு விலகியே இருந்தார்கள். நிர்வாகிகள் மட்டும் பள்ளிவாசல் முன்பு கூடி நின்று கொண்டு வம்பளந்து கொண்டிருப்பார்கள் எப்போதும்.வயசானவங்களுக்கு இவர்களின் நடவடிக்கை பிடிக்காமல் பழையபடி சுன்னத் ஜமாஅத் பள்ளிக்கே போக ஆரம்பித்து விட்டார்கள்.

அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பிறகு 'பயான்' (உபதேசம்) சொல்வதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார் இமாம். பதினைந்து நிமிடங்களுக்கு பயான் நீளும் தினமும். சொல்வதையே திரும்பத் திரும்ப சொல்லி இந்த பதினைந்து நிமிடங்களையும் ஒரு வழியாக ஒப்பேத்தி விடுவார் இமாம். கதுக்குட்டித்தனமான பயானாக இருக்கும். கவனமில்லாமல் ஒருவித வெறுப்பாகத்தான் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருப்போம். ஒரு சிலர் உடனே எழுந்து தப்பித்துப்போய் விடுவார்கள்- எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் கவலைப்படாமல். இப்படியே சில நாட்கள் சென்றன.....

***

ஒரு நாள், செல்போன்களை ஆஃப் செய்யாமல் தொழுபவர்களைப் பற்றியும், மோசமான சினிமா பாடல்களை ரிங் டோனாக வைத்து எல்லோரது கவனத்தையும் சிதறடித்து , தொழுகையை பயனில்லாமல் செய்வது பற்றியும் உரையாற்றியது மட்டுமல்ல , தொழுகையை முடித்த கையோடு செல்போனை உயிர்ப்பித்தபடி பரபரப்பாக எழுந்து போகிறவர்களைப் பற்றியும் குறிப்பிட்டு ஒரு பத்து நிமிஷம் இறையச்சத்துடன் இறைவனை வணங்க முடியாதவர்களா மாறிவிட்டோமா..நாம் ....? என்று பேசியதும் மிகச்சிறப்பாக இருந்தது. ஆகா..... இமாம் தேரிவிட்டரே..!

எப்படியோ குழப்பவாதிகளால் நல்லது நடந்தால் சரி…… என்பதாக இருந்தது எல்லோரது எண்ணங்களும். இமாமும் இனி தன்னை திருத்திக் கொள்ளுவர் என்று நான் நினைத்துக்கொண்டேன்.

முன் சுன்னத் ,பின் சுன்னத் என்கிற உபரித் தொழுகைகள் பற்றியும் இதனால் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியல் இட்டு இந்த உபரியான தொழுகைகளையும் உதாசீனம் செய்யாமல் கட்டாயம் எல்லோரும் தொழ வேண்டும் என்றும் வலியுறுத்தினர் அடுத்த ஒரு பயானில். இறைவனின் நற்கூலியை அதிகம் பெற வேண்டி நாமும் இனி இந்த முன்,பின் சுன்னத் தொழுகைகளை விடாமல் தொழ வேண்டுமென தீர்மானித்துக்கொண்டேன்.

அன்றைய இரவு இஷா தொழுகையை நடத்தி முடித்த கையோடு செல்போனை உயிர்ப்பித்த படிக்கு வேகமாக எழுந்து வெளியே போய்க்கொண்டிருந்தார் இமாம். இமாம் வெளியேறிச் செல்வதை நாங்கள் ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தோம்- துஆ செய்தவாறு…...

***************************

--. பயான் -- உபதேசம்